இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 20 June, 2010

திண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.


தின்பண்டம் தித்திக்கும்!
                          குடியிருப்பு பகுதியில் குடிசை தொழில் என்று கூறி,அண்டிதோடு எரித்து,அதில் வரும் புகையினால்,  அப்பகுதியில் குடியிருப்போருக்கு, அல்லல் தினம் கொடுத்து வந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை, ஆய்வு செய்து புகையினால், அருகில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறுகள் வருமென்று, குறைகள் களைய அறிவிப்பு  அனுப்பினோம். குறைகள் களைய மனமில்லை.
                           குற்றங்கள் மட்டும் தொடர்ந்தன. 
                        எப்படி வேண்டுமானாலும் தயாரிப்போம். எங்களை கேட்க, எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்ய அருகதை உண்டா உங்களுக்கு? இதுதான் கிடைத்த பதில். சளைக்கவில்லை நிர்வாகமும். குழு ஒன்று அமைத்து அறிக்கை பெற்றது.  
மூன்று முறை விசாரணைக்கு வர சொல்லி, அவர் தரப்பு நியாயங்கள் ஏதேனும் இருந்தால் எடுத்து சொல்ல அழைத்தோம். எடுத்து சொல்ல வரவில்லை. 
                         தொழிலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது நிர்வாகம். தொடர்ந்து நடத்தியதால், மூடி சீல் வைக்கப்பட்டது மாலை நாலு மணியளவில். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்.

                                                 எங்கள் பணி தித்திக்குமா?
                               அன்றிரவே ஆரம்பித்தன பிரச்சனைகள். சீலிட்ட வீட்டிற்குள் இறக்கி விடப்பட்டனர்  இரு நபர்கள்.  தணிந்த வீடுகள் தொடர்ந்து இருந்ததால்,   பூட்டிய வீட்டிற்குள் புகுந்துவிட்ட புண்ணியவான்கள்.    அத்தனை பேரிடமும் அவசரமாய் சொன்னார்கள்-ஆளிருந்த வீட்டை சீலிட்டுவிட்டதாக. 
                         காவல் துறை உதவியுடன், கயவர்களை, சீலுடைத்து வெளியேற்றினோம், இரவு மணி ஒன்றானது.  இதற்குள் ஆயிரம்  மிரட்டல்கள்.இன்ன பிற. திறந்து விட்டு ஆட்களை வெளியேற்றி, மீண்டும் சீல் வைத்தோம்.
                                

Follow FOODNELLAI on Twitter

Tuesday 15 June, 2010

சோயா உண்போம் சோகம் தவிர்ப்போம்

சோயா உண்போம் சோகம் தவிர்ப்போம் -கொழுப்பைக்குறைக்கும் சோயா


    நாற்பதைக் கடந்தால் பெண்களுக்கு மெனோபாஸ் தொல்லைகள் அதிகம். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை பெண்களுக்கு உருவாக்கும். இதய நோய், இனிப்பு நோய் இன்முகம் காட்டும். ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் இயல்பாய்க் குறைந்துவிடுவதே இத்தகைய இன்னல்களுக்கு காரணமாகும்.
    ஈஸ்ட்ரோஜனை ஈடுகட்ட சோயாவில் அதற்கு ஈடான பொருட்கள் இருப்பதாக அமெரிக்க  அலபாமா பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு நாற்பது வயதைக்கடந்த ஆசியாவைச்சா
ர்ந்த கருப்பினப் பெண்களும், ஐரோப்பாவைச்சார்ந்த வௌ;ளையினப்பெண்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்ளில், ஆசியப்பெண்களுக்கு, தொடர்ந்து சில நாட்கள், சோயா கலந்த உணவு கொடுக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர், அவர்களின் எடையைப்பார்தபோது, ஆசியப்பெண்கள், ஐரோப்பிய பெண்களைவிட இரு மடங்குக்கும் மேலாக எடை குறைந்திருந்தது தெரியவந்தது.
    சோயாவிலுள்ள ஈஸ்ட்ரோஜெனிற்கு இணையான பொருட்களே இதற்கு காரணமென்பது அவ
ர்கள் கண்டுபிடிப்பு. மேலும், சோயா உணவை அதிகம்          சேர்ப்பவர்களின் அடிவயிற்றுக்கொழுப்பு விரைவில் கரைந்துவிடுகிறது. சோயா உண்போம். சோகம் தவிர்ப்போம்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 13 June, 2010

ஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது!

ஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது!
                        என்னதான் வீட்டில் அறுசுவை உணவு கிடைத்தாலும், சிலருக்கு துரித உணவை துவம்சம் பண்ணாவிட்டால், தூக்கம் வராது. நேற்று ஒரு உணவகம் மீது புகார். நேரில் சென்று பார்த்தால், நெஞசம் பதறுகிறது. காலையில் தயாரித்த இட்லியும், தோசையும் , சூடுபடுத்தப்பட்டு மாலையில் மறு அவதாரம் எடுக்கின்றன. அரைத்து வைத்த மாவில் அத்தனை கரித்துகள்கள். சமையலறையைப் பார்த்தால் சத்தியமாய்ச் சாப்பிட மனம் வராது. 



        எடுத்து வந்து கடை வாசலில் போட்டு கிருமிநாசினி தெளித்து அழித்தோம். இன்னும் மூன்று தினங்கள் கடை இயங்காதிருக்க தடை விதித்தே உத்தரவிட்டனர் மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையரும், மாநகர நல அலுவலரும். என்னதான் செய்தாலும் எத்தனை முறை எச்சரித்தாலும் மனித உயிர்களோடு விளையாடும் மனங்கள் மட்டும் மாறவில்லை.







        உரக்கச் சொல்வீர்  ஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது!



       
Follow FOODNELLAI on Twitter

Wednesday 9 June, 2010

தொடரும் சோதனைகள் துரத்தும் சோகங்கள்.

எத்தனைதான் சோதனைகள் தொடர்ந்தாலும், எத்தர்கள்தான் இன்னும் திருந்தவில்லை. நேற்று சோதனை, இன்று அந்த வேதனைகளை அகில இந்திய வானொலியின் நெல்லை நிலையத்தில் நேயர்களின் நேரடி கேள்வி பதில்   நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதில் கூறி பகிர்ந்து கொண்டேன். கலப்படம், காலாவதியானவை குறித்து விரிவான விவாதம் நடந்தது.
Follow FOODNELLAI on Twitter

Monday 7 June, 2010

உணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவடிக்கைகள்.


உணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவடிக்கைகள்.

           உணவில் கலப்படத்தை ஒழிக்க, மத்திய மாநில அரசுகள் பல உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சமீபத்தில், காலாவதியான உணவுப் பொருள் விற்பனை செய்த பல கடைகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் நாம் அனைவரும் அறிந்ததே. உணவுப்பொருளில் மட்டுமல்ல, உயிர்  காக்கும் மருந்திலும் நயவஞ்சகர்கள் போலியானவற்றை உலவவிட்டனர். அரசு எடுத்த பல உறுதியான நடவடிக்கைகள் அவற்றை ஒழிக்க உதவின.
           உண்ணும் உணவிலும், உயிர்காக்கும் மருந்திலும், போலிகளைப் புழக்கத்தில் விடும் புல்லுருவிகளைப் புடைத்தெடுக்கவும், நல்ல உணவுப்பொருட்களை நாட்டு மக்களுக்கு வழங்கிடவும், உயிர்காக்கும் மருந்துகளை உன்னதமாய்க் கொடுத்திடவும், உணவுக்கலப்படத்தைத் தடுக்கும் துறையையும், மருந்துக்கட்டுப்பாட்டுப் பிரிவையும் இணைத்து, தமிழ்நாட்டில், ஒரு IAS  அதிகாரி தலைமையில்,   உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு ஆணையரகம் அமைத்திட அரசு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அது குறித்து, 05.06.2010ந்தேதிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்துள்ள செய்தியிது:
 
நன்றி : THE TIMES OF INDIA,CHENNAI.
Follow FOODNELLAI on Twitter

Saturday 5 June, 2010

இடுப்பைக் குறைக்க உணவைக்குறைப்பவரா? இதய நோய் வரலாம்!

இடுப்பைக் குறைக்க உணவைக்குறைப்பவரா? இதய நோய் வரலாம்!



குண்டு உடம்பு இளைத்து, கொடி இடையாக வேண்டுமென பட்டினி கிடப்பவரா? பாருங்கள் படியுங்கள்:


கலிபோர்னியா மற்றும் மின்சொனட்டா பல்கலைக்கழக உணவியல் அறிஞர்கள், டயட்டில் இருப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய 121 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரு பிரிவாகப் பிரித்தனர். அதில், ஒரு பிரிவினருக்கு, 1200 கலோரிகள் கிடைக்குமாறு மூன்று வாரங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு, 2000 கலோரிகள் கிடைக்குமாறு உணவு வழங்கப்பட்டது.

மூன்று வாரங்கள் முடிந்தபின், அவர்களின் உமிழ் நீர் சோதனை செய்யப்பட்டது. கலோரிகள் குறைந்த உணவை உண்ட குழுவினரின் உமிழ் நீரில், மன அழுத்தம் உருவாக்கும் “கார்டிசால்” எனும் ஹார்மோன் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த ஹார்மோன் அதிகரிப்பால், உடலில் ஏற்படும் மாற்றங்களால், இதய நோய், இனிப்பு நோய்(டயபடீஸ்), புற்றுநோய் கட்டிகள் உருவாகலாமென எச்சரித்துள்ளனர்.

எடையைக் குறைக்க, டயட்டில் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம், மற்ற நோய்களைக் கொண்டு வராமலிருக்க வேண்டும். கவனம் தேவை.
இதற்கு எதிர்மறையான முடிவுகள், அமெரிக்க “டப்ட்ஸ்” பல்கலைக்கழக, மனித ஊட்டச்சத்து மைய ஆராய்ச்சியில் கிடைத்துள்ளது. கலோரிகள் நிறைந்த உணவை உண்போரை விட, கலோரிகள் குறைந்த உணவை உண்போருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது, இவர்களின் ஆறு மாத கால ஆராய்ச்சியின் அரிய கண்டுபிடிப்பாகும்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 2 June, 2010

புகையில்லா புகையிலை.


    புகையில்லா புகையிலை.
          உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடும் நாள் மே-31. உலக சுகாதார நிறுவனம், 1987ல்  துவக்கிய இயக்கம். தொடர்ந்து நடைபெறுகிறது. உலகளவில் நிகழும் இறப்புக்களில், இரத்தக்கொதிப்பிற்கு முதலிடம். அடுத்து நிற்பது புகையிலையால் வரும் புற்று நோய். உலகில் நிகழும் இறப்புக்களில், பத்தில் ஒன்று புகையிலை தரும் புற்று நோயால் நிகழ்கிறது
           இந்த ஆண்டின் விசேஷம் என்னவெனில், வளர் இளம் பெண்களையும்  மகளிரையும்  சிறப்புக் கவனம் செலுத்தி அவர்களை புகையிலை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதேயாகும்..
           புகை உருவாக்கும் புகையிலை ஒருபுறம். புகையில்லா புகையிலை மறுபுறம். புகையில்லா புகையிலையில் இருவகை. மூக்குப்பொடியென்று ஒன்று, மெல்லும் புகையிலையென்று ஒன்று.
           புகையிலையில், புற்று நோய் உருவாக்கும் 28 வகையான கராணிகள் உள்ளன. புகையிலை வளரும் போதும் பதப்படுத்தப்படும் போதும் உருவாகும் நைட்ரசோமைன்கள் புற்றுநோய் உருவாக்கும் காரணிகளாகின்றன.
           புகையிலை அனைத்திலும் நிகோட்டின் எனும் நச்சுப்பொருள் உள்ளது. சிகரெட் போன்ற புகையிலை பொருட்களிலிருந்து கிடைக்கும் நிகோட்டினை விட, மெல்லும் வகை புகையிலையிலிருந்து 3 முதல் 4 மடங்கு அதிக நிகோட்டின் மெல்லும் வகை புகையிலையிலிருந்து கிடைக்கின்றது. மெல்லும் புகையிலையிலிருந்து, நிகோட்டின் மிக மெதுவாகக் கிடைக்கும் . ஆனால், இரத்தத்தில் கலந்த பின், நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
              புகையிலை பயன்படுத்துவதால், உதடு, கன்னம், ஈறு, நாக்கு என வாயின் அத்தனை பகுதிகளும் புற்றுநோய் தாக்கும் அபாயத்திற்குள் வந்துவிடுகின்றன. சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை விட, புகையில்லா மெல்லும் புகையிலையை ஆண்கள் அதிலும் சிறுவயதினர்(18 முதல் 25 வயதில்) அதிகம் பயன்படுத்துகின்றனா;.
       குறைந்த அளவு நிகோட்டின் மற்றும் தார்  உள்ள சிகரெட் பிடித்தால், புகையினால் நமக்கு பகையில்லையென்று எண்ணுகின்றனர். அது முற்றிலும் தவறாகும். குறைந்த பட்சம் நாளொன்றிற்கு நான்கு சிகரெட் பிடித்தால் போதும், இதய நோய்களுக்கும், இள வயது இறப்பிற்கும இடமளிக்கும்.
           ஹெர்பல் சிகரெட்கள் பாதுகாப்பானதா? நிகோட்டின் இவ்வகை சிகரெட்களில் இல்லையென்றாலும், அவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் போன்றவை உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பவையே. ஃபில்டர் சிகரெட் நிலைமையும் இதேதான். எனவே, உலகில் நல்ல சிகரெட் என்று ஒன்று கிடையவே கிடையாது.
  •     உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வில் கிடைத்த தகவல்:
  •      இந்தியாவில் பள்ளி மாணவர்களில் 14 சதவிகிதம்  பேர்                            புகை   பிடிக்கும்     பழக்கம் கொண்டுள்ளனர்.
  •        மாணவிகள் பங்களிப்பு சிறிது குறைவு - 8 சதவிகிதம்.
  • · புகைக்கும் மாணவர்களில் 5ல் ஒருவர் தனது வீட்டிலுள்ள சொந்தங்களைப் பார்த்து பழகியுள்ளனர். 3ல் ஒருவர், வெளியாட்களைப் பார்த்து பழகியுள்ளனர்.
  •  இம்மாணவர்களில் 24 சதவிகிதத்தினரும், மாணவிகளில் 13 சதவிகிதத்தினரும், புகை பிடிப்பதால், தங்கள் நட்பு வட்டம் பெருகுவதாகத் தெரிவித்துள்ளனர் .
  • இம்மாணவர்களில் 21 சதவிகிதத்தினரும், மாணவிகளில் 16 சதவிகிதத்தினரும், புகை பிடிப்பதால், தங்கள் ஸ்டைல் அதிகரித்து, மற்றவர்களைக் கவர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
  •  ஆறுதலான செய்தியொன்று: புகை பிடிப்பவர்களில் 3ல் 2 நபர்கள் புகைப்பதைக் கைவிடும் நினைப்புடன் உள்ளனர்.
  •  புகை பிடிப்பதால் புற்று நோய் வரும். எத்தனை பிடித்தால் புற்று நோய் வரும்? அண்மைய ஆய்வின் முடிவு: 15 சிகரெட் போதுமென்கின்றது.
  •                                     
           புகையிலை ஒழிப்போம். புதிய சமுதாயம் படைப்போம்.

Follow FOODNELLAI on Twitter