இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 24 November, 2010

ஹோட்டலுக்கு பூட்டு -கலப்பட தேயிலைக்கும் வேட்டு.

                                          இரண்டு மூன்று நாட்களாய் நெல்லையில் நல்ல மழை. இடி மின்னலுடன் இறங்கியது மழை.  அனைத்து உணவகங்களிலும், அருந்திட வெந்நீர் வழங்க அறிவுறுத்தியிருந்தோம்.சுத்தமாய், சுகாதாரமாய் உணவகங்கள் நடத்திட எச்சரிக்கைகளும் விடுத்திருந்தோம்.   என்னதான் நடக்கிறது என்று அதிரடி ஆய்வு நடத்திட ஆணையர் அறிவுறுத்தினார்.  நேற்று காலை, சந்திப்பு பகுதி உணவகங்களில், சக ஆய்வாளர்களுடன் சென்று சட்டென்று ஆய்வு நடத்தினோம்.
                                 முதலில் பார்த்த உணவகத்தில், முன்புறம் உணவருந்தும் அறையினை  பார்த்தவுடன் பசி வயிற்றை கிள்ளும் விதமாய் பகட்டாய் அலங்கரித்து வைத்திருந்தனர். இப்படித்தான் இருக்குமென்றெண்ணி, அடுபங்கரைக்குள் அடி எடுத்து வைத்தால், இருந்த நிலை எடுத்து சொல்ல வார்த்தைகள்  வரவில்லை.
 
                                 முதல் நாள் செய்த முத்தான பலகாரங்கள், அத்தனையும் அடுபங்கரையில் அணிவகுத்து நின்றிருந்தன. இவையேன் இங்கிருக்கின்றன என்று வினவினால், விற்பனைக்கல்ல என்ற  ஒற்றை வார்த்தைதான் வந்தது பதிலாய். ஆங்காங்கே அழுகிய காய்கறிகள், அதிலிருந்து வந்தன அருமையான வாசங்கள்.
                               ஆலோசித்தோம்- அதிகாரிகளின் அறிவுரை பெற்றோம். அங்கிருந்த அனைவரையும் வெளியேற சொல்லி, சுகாதார சீர்கேடுகள் சீர் செய்யும்  வரை உணவகத்தை மூட சொல்லி உத்தரவிட்டோம். 



                                தொடர்ந்து நடத்திய ஆய்வின்போது, கலப்பட தேயிலையை, கலக்கம் ஏதுமின்றி, கடைகளில் விற்று வந்த கயவன் ஒருவன் கண்களில் பட்டான். சிறிது தேயிலையை எடுத்து, செய்தி தாள் மீது வைத்து தண்ணீர் ஊற்றி பார்த்தால் தெரியும் அதன் தரம் என்று  பார்த்து கொண்டிருக்கும் போதே பைகளை போட்டு விட்டு பறந்தான் அந்த படுபாதகன். பைகளில் இருந்தது பத்து கிலோ தேயிலை. பறிமுதல் செய்து அழித்தோம் அத்தனையும். 
 
இதுவரை செய்திதாள்களில் வந்த செய்திகள் பார்த்தோம் -
இனி செய்முறை விளக்கம் பார்ப்போம். 
 
கலப்பட தேயிலையை, மை உறிஞ்சி தாள்  மீது வைத்து சிறிது தண்ணீரை ஊற்றினால், அதிலுள்ள செயற்கை நிறங்கள், அந்த தாள் மீது விரைவாக பரவும். 
சுத்தமான கலப்படமில்லா தேயிலை மீது தண்ணீரை ஊற்றினால்,
நிறங்கள் விரைவில் பரவாது. 

நண்பர் மணாழகனின் அருமையான பதிவு ஒன்று சென்றுதான் பாருங்களேன்: 
http://foodsafetynews.wordpress.com/2010/11/24

Follow FOODNELLAI on Twitter

Monday 22 November, 2010

மோதிரக்கையால் குட்டு.


                 குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டுமென்பர். அப்படியோர்  குட்டு எனக்கும் கிடைத்துள்ளது, க்ரைம் நாவலில். ஆம். பேருந்து பயணத்தின்போது, வழித்துணைவன் நாடி நான் சென்றதோர்  புத்தகக்கடை. கடையில் பலகையெங்கும் பல விதமான புத்தகங்கள். புரட்டிப்பார்த்தபோது தேடினாலும் கிடைக்காது என்றோர்  நாவல். முன்னணி எழுத்தாளர்  திரு.ராஜேஷ்குமார்  எழுதிய (க்ரைம் நாவல்) அது.
                கல்லூரி   காலங்களில், திரு.ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான். கிரைம் நாவல் என்றால், கடைகளில் வந்தவுடன் வாங்கிடவும், வாங்கியவுடன் படித்துமுடித்திடவும், ஆவல் எனக்குள் பொங்கும். ஹூம் - நமக்குத்தான் வாலிபம் கடந்து, பிள்ளைக்கு வரன் பார்க்கும் வயது வந்துவிட்டது. அவர்  எழுத்துக்கள் மட்டும் இன்னும் இளமையாய்த்தான் இருக்கின்றன. சரி, வாங்கிப்படிப்போமென்று  தேடினாலும் கிடைக்காத நாவலை வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.
                 கோயம்புத்தூரிலிருந்து பேக்ஸ் பகுதியில், காய்கறிகளிலும் கலப்படம் என்ற எனது கட்டுரையை பற்றிய விமர்சனமும், ஆக்ஸிடோஸின் குறித்த எச்சரிக்கைகளையும் நச்சென்று உச்சரித்திருந்தார். இதோ அவை உங்கள் பார்வைக்காக:




Follow FOODNELLAI on Twitter

Sunday 14 November, 2010

குழந்தைகளை குதறும் குதர்க்கங்கள்.

      குறுக்கு புத்தி மனிதர்கள் 
          குழந்தைகள்  கடத்தல்
             குற்றுயிராக்குதல்
                  பாலியல் தொந்தரவுகள் 
                     பணத்திற்காக மூச்சை நிறுத்தும் 
                         பல்வகை தொந்தரவுகள்
                             இப்படி இன்னும் பல பார்த்து நொந்த நமக்கு 
                                இடிபோல் வந்திறங்கிய இனிப்புகளில் மருந்துகளின் கலப்படம்.
இந்த வாரத்தின் துவக்க நாள். எனது குடும்ப வேலையாக வெளியூர் சென்று திரும்பிகொண்டிருந்தேன். கை பேசியில் ஓர் அழைப்பு. பேசியவர் ஓர் அரசு நரம்பியல் மருத்துவர். நியாயவாதி. நெஞ்சம் பொறுக்காத சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.  

             
                                     வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி கேட்டேன். சொன்னவை அனைத்தும் பெறும் சோகங்கள். துள்ளி விளையாடும் பிள்ளைகள் பயிலும் பள்ளிகள் அருகில் "தூதுவளை மிட்டாய்"  என்றும் "வல்லாரை மிட்டாய்" என்றும் விற்கப்படும் மிட்டாய்களை வாங்கி தின்ற குழந்தைகள் சிலர் நரம்பு மண்டல பாதிப்பால், சில தனியார் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்து நிறுத்தம் அருகே பயணத்தின்போது வாந்தி வருவதை தடுக்கும் என்று விற்கப்படும் வல்லாரை மிட்டாய்களை, சிறு குழந்தைகள் வாங்கி உண்டால், வந்து விடுகிறது இந்த பாதிப்பென்றும் வருத்தப்பட்டார்.வாந்தி வருவதை தடுக்கும் மருந்தினை இந்த மிட்டாய்களில், கலப்படம் செய்திருக்கலாம், அதுவே துள்ளி விளையாடும் பள்ளி குழந்தைகளை துவண்டு விழ செய்திருக்கும் என்றார். 
 
                                   அரசு மருத்துவராய் இருப்பதால், இந்த அநியாயங்களை அனைவரும் அறிய அறிவிப்பதில் தயக்கமாய் இருப்பதாகவும் எடுத்துரைத்தார். நரம்பு மண்டலம் பாதித்த குழந்தை ஒன்றிற்கு நாற்பதாயிரம் செலவழித்தும் சீராகவில்லை என்றார். அடுத்த நாள் பத்திரிக்கை ஒன்றில் இது தலைப்பு செய்தியாக வந்தவுடன், விரைந்து வந்தன நடவடிக்கைகள். தனியார் மருத்துவ மனைகளில் கணக்கெடுப்பு நடத்தியது சுகாதாரத்துறை. மாவட்ட தலைநகரம் தவிர்த்து பிற நகர்களிலிருந்தும் பல பிள்ளைகள் சிகிச்சையில் இருந்தனர். திருநெல்வேலி சுகாதாரபனிகள் துணை இயக்குனரும், சங்கரன்கோயில் சுகாதாரபனிகள் துணை இயக்குனரும் பம்பரமாய் சுற்றி எடுத்த பல நடவடிக்கைகளால், மாவட்டம் முழுவதும் மேற்கண்ட மிட்டாய்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. தடய  அறிவியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன அந்த மிட்டாய்கள். 
  
                                  நெல்லையில் உள்ள மொத்த மருந்து விற்பனை கடையிலிருந்துதான், மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யபடுவதாக துணை இயக்குனர் அளித்த தகவலின் பேரில்,  நெல்லையில் உள்ள மருந்து மொத்த விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, இருந்த மிட்டாய்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தோம்.இனியும் இத்தகைய மிட்டாய்களை  விற்க வேண்டாமென எச்சரித்து வந்தோம்.
                                    பறிமுதல் செய்த மிட்டாய்களை, சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி, ஆய்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
தீக்கதிர் -13 .11 .10    



                சின்ன குழந்தைகள் சிரித்து விளையாடி மகிழட்டும் விடுங்கள் - உங்கள்            சில்லரைதனங்கள் செத்தொழியட்டும் மாறுங்கள். 
Follow FOODNELLAI on Twitter

Wednesday 10 November, 2010

வியக்க வைக்கும் வேர்கடலை.


                                    மாலை வேளையில், மனதிற்கு இதமாய், வயிற்றிற்குப் பதமாய் உண்ண உகந்த ஓர்  உணவு. 
                                  வேர்க்கடலை என்ற பெயரே சொல்லும் 
                                  வேரில்  விளையும் கடலையென்று. 
                                  முதலில், மெக்ஸிகோ, தென் மற்றும் மத்திய அமெரிக்கா  நாடுகளில் விளைவிக்கப்பட்டது. பின்னர், உலகின் பல பகுதிகளிலும்; பயிரிடப்படுகின்றது. இதிலுள்ள சத்துக்கள் என்று பார்த்தால்,
வேர்க்கடலை100 கிராமில்:
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து)  - 93.00  மி.கி.
கார்போஹைட்ரேட்                       - 16.13  கிராம்
காப்பர்                                                 -  11.44    மி.கி.
கொழுப்பு                                            -  49.24  கிராம்.
நார்ச்சத்து                                          -    8.50  கிராம்.
இரும்புச்சத்து                                   -    4.58  மி.கி.
மெக்னீசியம்                                     - 168.00  மி.கி.
மேங்கனீஸ்                                       -    1.934  மி.கி.
பாஸ்பரஸ்                                         - 376.00  மி.கி.
பொட்டாசியம்                                  - 705.00  மி.கி.
புரதம்                                                   -   25.80  கிராம்.
சோடியம்                                            -   18.00   மி.கி.
துத்தநாகச்சத்து                                -     3.27   மி.கி.
தண்ணீர்ச்சத்து                                 -     6.50   கிராம்.
                          இரத்த உறைவு, நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு நிகழ்வு. சிறிய காயங்கள் ஏற்படும்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ இரத்த உறைவு தாமதமானால், அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும். சிலருக்கு திடீரென மூக்கில் இரத்தம் வடியும். சில பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாயிருக்கும். இவ்வாறு, இரத்த உறைவு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, வேர்க்கடலை ஒரு வரப்பிரசாதம். வேர்க்கடலையிலுள்ள புரதம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நம் உடலிலுள்ள செல் திசுக்கள் மற்றும் மூளை திறம்பட செயல்பட உதவும், நம் உடலின் எலும்புகள் இருகிடச்செய்யும்.
        நம் தேசத்தந்தை அன்றே உண்ட வறுத்த வேர்க்கடலையும், ஆட்டுப்பாலும் அத்துடன் சிறிது கருப்பட்டியும் சோ;த்து வளரும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுர்ட்டும் தாய்க்குக் கொடுத்து வந்தால் அதைவிட அவர்களுக்கு அருமருந்து வேறில்லை. மஞ்சள் காமாலை மற்றும் காசநோய் போன்றவற்றை நம்மருகே வர விடாமல் தடுப்பதில் வேர்க்கடலைக்கு இணையில்லை.
        நாம் உண்ணும் உணவின்மூலம் உடலில் சேரும் சர்க்கரையின் அளவைக்குறிப்பது,“கிளைசீமிக் இண்டெக்ஸ்”என்பதாகும். அந்த கிளைசீமிக் இண்டெக்ஸ், வேர்க்கடலையில் குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்தது. மேலும், வேர்க்கடலையிலுள்ள மெக்னீசிய சத்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் இன்சுலினை சுரக்கச்செய்யும். ஹார்மோன்களை இனிதே இயக்கிவிடும்.
        வேர்க்கடலை சாப்பிட்டால் பித்தமென்றும், கொழுப்பு உடலில் கூடுமென்றும் வீண் கவலைகள் பலருக்கு உண்டு. பயம் வேண்டாம். வேர்க்கடலையில் உள்ளது--  நல்ல கொழுப்பு. எனவே, கடலை எண்ணெயில் தயாரித்த உணவுப்பண்டங்களும் தாராளமாய் உண்ணத்தகுந்தவையே.
                  எண்ணெய் கொதித்து புகையாகும் நிலையை அடையும்போதுதான், கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உருவாகின்றன. மற்ற  எண்ணெய் புகையாகும் கொதிநிலை 275 முதல் 300 வரையிருக்கும்போது, கடலை எண்ணெய் புகையாகும் கொதிநிலை கிட்டத்தட்ட 320 வரையிருப்பதால், கடலை எண்ணெயில் கெட்ட கொழுப்பு விரைவில் உருவாகுவதில்லை என்பது நல்ல செய்தி.                       இத்தகைய வேர்க்கடலையை உண்பதற்கும் ஒரு வரைமுறையுண்டு. புதிதாய் விளைந்த கடலையை உண்பது நல்லது. தோலுடன் சாப்பிடுவதும், வேகவைத்தோ, வறுத்தோ உண்பது மிகவும் நல்லது. நாளான கடலையிலும், முறையாக சேமிக்கப்படாத கடலையிலும், “அப்லோடாக்ஸின்” எனும் நஞ்சுப்பொருட்கள் உருவாகும். அவற்றை நாம் உண்டால், வயிற்றுவலி தொடங்கி, வாழ்நாள் குறையும் பிரச்சனை வரை உருவாகும்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 9 November, 2010

மோகன்ராசுக்கு முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு சல்யூட்.

                                   இரு  பிஞ்சு உள்ளங்கள் பதற பதற கொன்று விட்ட மோகன்ராசுக்கு முதலில் முடிவு கட்டிய கோவை போலீஸுக்கு ஒரு ராயல் சல்யூட். இனி இத்தகைய இழிசெயல்களில் இறங்கவும் காமுகர்கள் பதறவேண்டும். இந்த அரிய பணியில் காயமுற்ற காவல்துறை அதிகாரிகள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்.
                                   மரண பயத்தில் மனோகரன். செய்த பாவம் தொலைய, இவனும் செத்து விழட்டும் -சீக்கிரம்.  மனிதத்தை மரிக்க செய்த இந்த பிணங்கள் இருந்தாலும், இறந்தாலும் இழப்பொன்றுமில்லை, இந்த பூமிக்கு. 
Follow FOODNELLAI on Twitter