நெல்லையை சார்ந்த திரு. குரு சண்முகநாதன் அவர்கள் எழுதிய "நல்லெண்ணையின் மருத்துவ ரகசியங்கள்" என்ற நூல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது. அந்த நூல் ஆசிரியரை, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் அன்பழகன், நற்சான்று வழங்கியுள்ளார்.
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Monday 31 January, 2011
Sunday 30 January, 2011
இன்றைய நெல்லை-14
நன்றி :shutterstock.com
களக்காடு அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் யானைகள் நேற்றிரவு வயல்களில் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியதுடன், பனை மரங்களை பிடுங்கி எறிந்தன. களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதமாக யானைகள் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, கோயிலின் அருகே உள்ள 3 பனை மரங்களை பிடுங்கி எறிந்து, அதன் குருத்துக்களை தின்றன. அதன்பிறகு வெள்ளப்பாறை பகுதியில் உள்ள பூதத்தான்குடியிருப்பில் வயலில் புகுந்து சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை சேதப்படுத்தின.
Labels:
இன்றைய நெல்லை
அள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.
அள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள். எத்தனை முறை எடுத்தாலும், எள்ளளவும் பயமின்றி, பிள்ளை விளையாட்டு போல், புதுசு புதுசாய் , புற்றீசலாய் புறப்பட்டு வரும்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி, முழு மூச்சாய் இறங்கி, அள்ளியே எடுத்து வந்தோம், பயணிகள் செல்லும் பாதை எல்லாம், பதவிசாய் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளை. பத்திரமாய், பாதுகாப்பாய் வைக்காமல், திறந்த நிலையில், ஈக்கள் மொய்க்க எதுவாய், இழி நிலையில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களும், எம் பார்வையில் தப்பவில்லை.
பயணிகளுக்கான ஓய்வு அறை கூட , ஆக்கிரமிப்பாளர்களின் அநியாயங்களில் இருந்து தப்பவில்லை. பயணிகள் ஓய்வு அறையில், பழைய புத்தகங்களை பரப்பி வைத்திருந்தான், பாதகன் ஒருவன். ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது அள்ளுபவை எல்லாம், உரக்கிடங்கிற்கு மட்டுமே உறுதியாய் அனுப்பப்படும். கல்வி கண் திறக்கும் புத்தகங்கள் என்பதால்,அவற்றை மட்டும் பாதுகாப்பாய் பத்திரபடுத்தினோம்.
அவரவர் கடமையை, அவரவர் உணரும் வரை, ஆக்கிரமிப்புகள் தொடர்கதைதான்.
அவரவர் கடமையை, அவரவர் உணரும் வரை, ஆக்கிரமிப்புகள் தொடர்கதைதான்.
Labels:
கட்டுரைகள்
Saturday 29 January, 2011
இன்றைய நெல்லை-13
- நெல்லை மாவட்டத்திலுள்ள மூன்று கிராம பஞ்சாயத்துகள்,2009- 2010 ம் ஆண்டிற்கு, உத்தமர் காந்தி விருது பெற தேர்ந்தெடுகபட்டுள்ளன. அடிப்படை வசதி, குடிநீர், சுகாதாரம், வடிகால் வசதி ஆகியவற்றை சிறப்புடன் நிறைவேற்றியது, குடிநீர் வரி மற்றும் சொத்து வரி நூறு சதம் வசூலித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மூன்று கிராம பஞ்சாயத்துகளும் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒரு கேடயமும், ஐந்து லட்ச ரூபாய் நிதியும் பெறும் அந்த மூன்று கிராம பஞ்சயாத்துகள்:
- கடையநல்லூர் ஒன்றியத்திலுள்ள கொடிகுறிச்சி
- கீழபாவூர் ஒன்றியத்திலுள்ள குணராமநல்லூர் மற்றும் இனாம் வெள்ளகால்.
Labels:
இன்றைய நெல்லை
பிற்பகல் தாமே விளையும்!
"முற்பகல் செய்யின்" என்ற பதிவில், பொறுப்பற்ற மனிதர்களின் செய்கைகள் சில பார்த்தோம்.( மேற்கண்ட பதிவை பார்க்காதவர்கள், தயவு செய்து அதற்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டு http://unavuulagam.blogspot.com/2011/01/blog-post_27.html பார்த்த பின், இப்பதிவை பார்க்க வேண்டுகின்றேன்) என்ன விளைவுகளை ஏற்படுத்தும் இவை?
இரண்டாம் பகுதியில், என் சகாக்கள் வீட்டுக்குழந்தைகளே நடித்தனர்.(ரம்யா,யாசர் மற்றும் ரீமா) அத்தனையும், அரை நாளில் முடித்துவிட்டோம். இயற்கையாய் நடித்துள்ள குழந்தைகள்,இன்னும் எங்கள் கண்களை இமைக்க விடவில்லை.
எனினும், நாங்கள் சொல்ல வந்த செய்தி படத்தில் ஜொலிக்கிறதா? பார்த்துத்தான் சொல்லுங்களேன்:
Labels:
ஒலி ஒளி காட்சிகள்
Friday 28 January, 2011
இன்றைய நெல்லை-12
மின்சார செய்தியின்று.
செய்தி-1 : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், தலா 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த 25 ம் தேதி அணு உலையின் உறுதி தன்மை கண்டறியபட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இதில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணு மின் நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். இரண்டாவது மின் உலை, டிசம்பர் மாத இறுதிக்குள் இயங்க தொடங்கும்.
செய்தி-2 : நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள சண்முகபுரத்தில், விவசாய கழிவுகளிருந்து, ஒரு மணி நேரத்திற்கு 18 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வல்ல ஆலை ரூபாய் எழுபத்திரண்டு கோடியில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம், நாற்பத்திநான்கு பேர் நேரிடையாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பயன்பெறுவர்.
இவை வந்த பின்னராவது, இருள் அரக்கனின் இம்சை தீருமா?
Labels:
இன்றைய நெல்லை
Thursday 27 January, 2011
இன்றைய நெல்லை-11
செய்தி-1:மனதை மயக்கும் இந்த மலர்கள், ஊட்டி ரோஜாக்கள் அல்ல. நெல்லை மாவட்டம், மானூரில் விளைந்துள்ள கேந்தி பூக்களே!
செய்தி-2: இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு,விடுதலை போராட்ட வீரர், சுதேசி கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி-3 : பாளை, சேவியர் கல்லூரி, சமூக பணி துறை சார்பில், வரும் 29 மற்றும் 30 தேதிகளில், சர்வதேச அளவிலான, திருநங்கைகள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. திருநங்கைகளின், சமூக, பொருளாதார, கல்வி நிலை உயர இக்கருத்தரங்கு உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Labels:
இன்றைய நெல்லை
முற்பகல் செய்யின் . . . . . . . . . .
கிராமங்களிலிருந்து நகரங்கள் நோக்கிய பயணம் யுகங்கள் பலவாய் தொடர்கின்ற கதைதான்.நகர வாழ்க்கையின் அவலங்கள் அறிந்தால், நகர வாழ்க்கை நரகமாகும். பூலோக நரகம் எதுவென்றால்,நகரங்களில் அடித்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதியெனலாம்.ஒரு நகரத்தின் பெருமை,மேல்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற வழ வழ சாலைகளும்,வழுக்கி விழுந்தால் எதிர்ப்படும் வசதிகளுமல்ல.
இருக்கின்ற நீரை, இரக்கமின்றி இரைக்கின்ற மக்கள் - ஒருபுறம்,குடிக்கின்ற நீருக்கே கொள்ளை தூரம் நடக்கின்ற பெண்கள் - மறுபுறம் -யார் சிறந்தவர்? நடக்கின்ற தூரத்தில், கிடைக்கின்ற வசதியை,சடைக்கின்ற மக்கள்.எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும்,அத்தனையையும் முறையாகப் பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்?
ஓரு ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகல் பொழுது. வாரம் முழுவதும் பார்த்த வேலைகளின் களைப்புத் தீர, வகையாய் உண்டு- உறங்கியிருந்த நேரம். அரை குறை தூக்கத்தில்ஆழ்ந்திருந்தபொழுதில்,அலுவலகத்தலைவரிடத்திலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. அரக்கப்பரக்க எழுந்து பேசினால், அவசரமாய் ஒரு குறும்படம் வேண்டும் என்றே அன்புக்கட்டளைஅடுத்தபக்கத்திலிருந்து.(நன்றாய் பணி புரிவதுபோல்) நடிக்கத் தெரியும்,அப்படிநடிப்பவர்களை நன்றாய்ரசித்திடத்தெரியும். இது என்ன புதுசாய்?. . . . . . . .
யோசிக்க நேரமில்லை,நாளைக்கே வேண்டுமென்றார். நல்ல வேலைகள் செய்வதென்றால்,நால்வர் அணி ஒன்றுண்டு. ஒருவர் பொறியாளர் (திரு.இசக்கிமுத்து), என்னைப்போல் மேலும் இருவர் சுகாதார ஆய்வாளர்கள்(திரு.அரசகுமார்; மற்றும் திரு.சாகுல்ஹமீது). அடுத்த அரை மணி நேரத்தில், கதைக்கான ஸ்கிரிப்ட் ரெடியானது. ஒளிப்பதிவாளர் பணிசெய்ய நண்பர் “மித்ரா” ரவி வந்து சேர்ந்தார். கதை ரெடி,ஸ்கிரிப்ட் ரெடி, கதைக்களத்திற்கு எங்கே போவது? யாரை நடிக்க வைப்பது?
அலுவலகத்திற்கு அருகிலிருந்த விடுதியும், அதில் பணிபுரியும் பையனும் முதல் பகுதியை முடிக்க உதவினர்.
நாங்கள் சொல்ல வந்த செய்தி படத்தில் ஜொலிக்கிறதா? பார்த்துத்தான் சொல்லுங்களேன்:
தொடரும் இதன் இரண்டாவது பகுதியில், பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் விளைகின்ற இன்னல்கள் காண்போம்.
Labels:
ஒலி ஒளி காட்சிகள்
Wednesday 26 January, 2011
இன்றைய நெல்லை-10
இன்று நெல்லையில் 62 வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி குயடியரசு தின வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மாநகராட்சியில், வணக்கத்திற்குரிய மேயர் கொடியேற்றி குயடியரசு தின வாழ்த்துரை வழங்கினார்.
பாளை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயில் மற்றும் நெல்லை சந்திப்பு, கைலாசபுரம், சௌந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோயில் ஆகியவற்றில், பல்லாண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.
(குடியரசு தினம் என்பதால், தேசிய கொடி நிறத்தில் இன்றைய பதிவு போட சிறு முயற்சி)
பாளை சிவன் கோயில். |
கைலாசபுரம் சிவன்கோயில்.
Labels:
இன்றைய நெல்லை
Tuesday 25 January, 2011
இன்றைய நெல்லை- 9
வாக்காளர் என்பதில் பெருமைகொள்வேன் - வாக்களிக்க தயார் என்பேன்!
வாக்காளர் தினம்: இன்று தேசீய வாக்காளர் தினம். மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள் குறித்து , V.M.S. திருமண மண்டபம் முன்னிருந்து, பள்ளி மாணவர்களின் சைக்கிள் பேரணி , கல்லூரி மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதிய முயற்சி. எனினும்,காசு பணமற்ற, நூறு சதிவிகித வாக்கு பதிவு ஒன்றே நம் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க செய்யும். நாம் நமது கடமையை கண்டிப்பாய் நிறைவேற்றுவோம்.
இன்று ,பாளையில் உள்ள தனியார் பள்ளியில், பூமி பாதுகாப்பு விழா நடத்தி, அதில் இயற்கை உணவு கண்காட்சி வைத்திருந்தனர். பாஸ்ட் புட், ENERGY TABLET என்று வேகமாக முன்னேறி(!) கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், இயற்கை உணவு விழிப்புணர்விற்காக எடுத்த முயற்சி பாராட்ட தக்கதே!
இன்று ,பாளையில் உள்ள தனியார் பள்ளியில், பூமி பாதுகாப்பு விழா நடத்தி, அதில் இயற்கை உணவு கண்காட்சி வைத்திருந்தனர். பாஸ்ட் புட், ENERGY TABLET என்று வேகமாக முன்னேறி(!) கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில், இயற்கை உணவு விழிப்புணர்விற்காக எடுத்த முயற்சி பாராட்ட தக்கதே!
Labels:
இன்றைய நெல்லை
Monday 24 January, 2011
இன்றைய நெல்லை- 8
சமூக சேவை -1 : நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் அருகே, இலஞ்சி என்று ஓர் ஊர். இங்குள்ள ஆசிரமத்தில், அறுபது அநாதை குழந்தைகள் உள்ளனர். ஆசிரமத்தை, நெல்லிகுப்பதை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் அவரது காதல் மனைவி த்ரூட் இங்க்லேட் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். அங்கு அவர்களுடன் உதவிக்கென இருக்கின்ற ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாட்டு இளைஞர் மற்றும் இளைஞியர், மாவட்ட ஆட்சியரை பார்த்து, ஆசிரமத்திற்கு செல்லும் ரோட்டை சீர் செய்ய மனு கொடுத்தனர்.
என்ன ஒரு சமூக பார்வை! என்றெண்ணி எண்ணி வியக்கவைக்கிறதே!
சமூக சேவை -2 :கேரளாவில் சுற்று சூழலை பாதுகாக்க கடுமையான விதிமுறைகள் உள்ளதென்பதால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கழிவு டயர்களும், தார் கலந்த காகிதங்களும் அனுப்பப்பட்டு, எரிக்கபடுவதாகவும், அதனால், சுற்றுப்புற நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகிறது என்றோர் எச்சரிக்கை இன்றைய நாளிதழில். இப்படியும் ஒரு சமூக சேவை! சற்றே சிந்திக்க பட வேண்டிய விஷயம். விழித்து கொண்டால், பிழைத்து கொள்ளலாம்!
Labels:
இன்றைய நெல்லை
பள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.
பள்ளி செல்லும் குழந்தைகள், பாதியில் படிப்பைத் தொலைப்பது வாடிக்கையாகிவிட்டது. கல்லூரி செல்லும் வயதிலும், கல்வியைத் தொலைத்தவர் பல பேர். என்ன காரணமென்றுஎண்ணிப்பார்த்தால்,பயம்,அன்னைதந்தையரின் அரவணைப்பின்மை, ஆசிரியரின் கண்காணிப்பின்மை என்று பலவித காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணம் மன அழுத்தம் எனலாம்.
பள்ளிப்படிப்பைத் தொலைக்கும் குழந்தைகள், பள்ளியை மட்டுமல்ல, வீட்டை விட்டே வெளியேறும் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை. படிப்பின் மீதும், பரிட்சையின்மீதும், சிலபல ஆசிரியர்கள் மீதும் இருக்கின்ற வெறுப்பு, குழந்தைகள் மனம் மாறவும் திசை மாறவும் வழிவகுக்கின்றன.இன்னும் சொல்ல போனால், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள ஊட்ட சத்து குறைபாடே கூட, பிள்ளைகளிடம் மாறுபட்ட எண்ணங்கள், மன அழுத்தம் உருவாக வழிவகுப்பதாக, ஊட்டசத்து குறைபாடு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
என்ன செய்யலாம்? அண்மையில் பதிவர் கௌசல்யா தமது http://kousalya2010.blogspot.com/2011/01/blog-post_21.html பதிவில் பிள்ளைகளுடன்மனம்விட்டுப்பேசுதல், எந்த தொடல்(GOOD TOUCH,BAD TOUCH)எப்படிப்பட்டதென விளக்குதல், பிள்ளைகளை காமப் பிசாசுகளிடமிருந்து காக்குமென்றிருந்தார். இங்கும் அப்படித்தான், பிள்ளைகள் வழிதவற பெற்றோரின் அரவணைப்பின்மை பெருந்தவறாய் அமைகின்றது.
சமீபத்தில்கூட சென்னை புறநகர் பகுதியில் ‘குழந்தைகள் நல போலீஸ்’ என்றொரு அமைப்பை அரசு உருவாக்கி உள்ளது. சீருடை தவிர்த்து, சேலையில் பணிபுரியும் பெண் போலீஸ்,பாதியல் படிப்பைத்தொலைக்கும் மாணவர்களுக்கும், வீட்டை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி மனமாற்றத்தை உருவாக்குகின்றனர்.
நம் வீட்டுப்பிள்ளைகளுடன், நாம் மனம் விட்டுப்பேசினால் நாளும் அது பலன் தருமே. சிந்திப்போம் சில நொடி- நம்மைப்பார்த்து, நம் சந்ததியை பார்த்து பிறர் சிரிக்காமல் இருக்கவே!
Labels:
கட்டுரைகள்
Sunday 23 January, 2011
இன்றைய நெல்லை-7
தாமிரபரணி ஆற்றில் மழை காலங்களில் பயன்படுத்த இயலாமல் கடலில் சென்று கலக்கும் 2675 மில்லியன் கன அடி வெள்ள உபரி நீரை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விட, தாமிரபரணி- கருமேனி- நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் 2014 இல் நிறைவேறும் என்று அப்பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணி துறை செயலர் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பில் நெல்லை முன்னோடியாக திகழ்கிறது.
மேலும், மணிமுத்தாறு அணையில் ரூபாய்.13 .50 கோடியில், இடிதாங்கி உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளே இன்றைய நெல்லையின் இனிப்பான செய்தி.
Labels:
இன்றைய நெல்லை
Saturday 22 January, 2011
இன்றைய நெல்லை-6
செய்தி ஒன்று:
நேர்மையும், நெஞ்சுரமும் மிக்க இந்த அதிகாரி(திரு.கா. பாஸ்கரன்) நெல்லை மாநகராட்சியில் எட்டு மாதங்கள் ஆணையாளராக பணிபுரிந்தவர். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில், இரு சக்கர வாகன பார்கிங்கிற்கு "ஸ்மார்ட் கார்ட்" திட்டம் கொண்டு வந்து பயணிகள் பலரின் பாராட்டு பெற்றவர் என்பது ஒரு உதாரணம். தற்போது திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்பெற அங்கு மாவட்ட ஆட்சியராய் பணிபுரிய செல்கிறார். மனமார வாழ்த்தலாம் வாங்க.
செய்தி இரண்டு:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்முறையாக பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. வனத்துறையும், அசோகா சுற்று சூழல் இயல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த அரும் பணியினை துவக்கியுள்ளன. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 1387 குளங்களில் முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் 53 குளங்களில் பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது கண்டறியபட்டுள்ளது. தற்போது ஆறு குழுக்கள், அந்த 53 குளங்களில் மட்டும் தீவிர கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர்.
Labels:
இன்றைய நெல்லை
Friday 21 January, 2011
இன்றைய நெல்லை-5
இளைய பாரதத்தின் இனிய நட்சத்திரங்கள்!
நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!
இப்படி இவர்கள் ஜொலித்திட, இதையும் நீங்கள் செய்திட வேண்டாமோ!
நினைவில் கொள்ளுங்கள். வரும் ஞாயிறு, போலியோ ஞாயிறு. 23 .01 .11 மற்றும் 27 .02 .11 ஆகிய ஞாயிற்று கிழமைகளில், ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இரு முறை, போலியோ சொட்டு மருந்து கொடுக்கபடுகிறது.
நெல்லை மாவட்டம் முழுவதும், சுமார் 2 .72 இலட்சம் , ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் மட்டும், 74 மையங்களிலும், மூன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
இந்த முறை சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில், ஜென்சன் வயலெட்டுக்கு பதிலாய், மார்கிங் பேனாவினால் குறியிடுவர் என்பது புதுமை.
நல்ல விஷயம் என்பதோடு, நாமும் நாலு பேருக்கு சொல்ல வேண்டிய விஷயமுங்க. நல்லா சொல்லுங்க - நாலு பேரிடம்,நம் வீட்டு குழந்தைகளுடன், நம் நாட்டு குழந்தைகள் அனைவரும் பயன்பெற.
தாய் மண்ணில் இருந்தாலும், தள்ளியே (வெளி நாட்டில்) இருந்தாலும், தவறாமல் தங்கள் சொந்தங்களிடம் நினைவு படுத்துங்கள், நண்பர்களே.
இன்றைய நெல்லையில் இன்றிமையாத செய்தி இதுதான்.
Labels:
இன்றைய நெல்லை
மறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.
ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலை மாசுபடுத்துகின்றன. அவை மண்ணோடு மண்ணாக மக்கி போவதில்லை. மண்ணில் விழுந்த இடத்தில், மழை நீர் பூமிக்குள் செல்வதை தடுத்திடும். நிலத்தடி நீராதாரம், நம் அனைவருக்கும் வாழ்வாதாரம்.
எத்தனையோமுறை எச்சரித்து விட்டோம். இருந்தும் பயன் இல்லை. கடந்த மாதம், நெல்லை மாமன்றமும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க, வாங்க, தயாரிக்க தடை விதித்துள்ளது.
நேற்று நடந்த அதிரடி ஆய்வில், மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தோம்.
உடனே வந்தது, ஓர் அமைப்பு. எப்படி எடுக்கலாம், எங்கள் கடைகளில் என்றே! சட்டப்படிதான் எடுத்து செல்கிறோம் என்றாலும், சட்டம் எங்களுக்கும் தெரியும் என்றனர். அனைவர் கூடி ஆணையாளரை சென்று பார்த்தனர். அவகாசம் தாருங்கள் என்று கூறி பார்த்தனர். அனைத்திற்கும் அவர் பதில், ஆய்வுகள் தொடரும், பறிமுதல் செய்தால், செய்ததுதான், நீங்கள் மாறிகொள்ளுங்கள் என்பதொன்றுதான்.
சொல்லி கேட்காதவர்கள், அள்ளி சென்றாலாவது அவர்களை மாற்றிகொள்வார்களா? மாற வேண்டும் மனித மனங்கள், மாசற்ற சூழல் உருவாக!
Labels:
பத்திரிக்கை செய்திகள்
Thursday 20 January, 2011
இன்றைய நெல்லை-4
நெல்லையை சேர்ந்த மாணவர் ஒருவர், தேசிய தடகள போட்டியில், தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தேசிய தடகள போட்டியில், 178 பல்கலை கழகங்களை சேர்ந்த ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்ட தேசிய தடகள போட்டியில், நெல்லை விளையாட்டு விடுதி மாணவர் ப்ரீத் கலந்து கொண்டு, "கோல் ஊன்றி தாண்டும்" போட்டியில், 4 .5 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
நெல்லைக்கு பெருமை சேர்த்துள்ள நாயகனை பாராட்டுவோம்.
Labels:
இன்றைய நெல்லை
இன்று ஒரு இனிய(!) தகவல் -நுகர்வோர் உரிமை.
கலப்படம், கலப்படம் என்று காலம் முழவதும் பேசிகொண்டிருந்தால் மட்டும் போதாது. கலப்படத்தை காணும்போது, நாம் என்ன செய்ய முடியும் ? நமக்கென்ன உரிமை இருக்கின்றது? காண்போமா!
Labels:
ஒலி ஒளி காட்சிகள்
Wednesday 19 January, 2011
இன்றைய நெல்லை-3
தசை திறன் சிதைவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது. இதுவரை இந்நோய்க்கு, வெளி நாடு சென்றே சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை இனி மாறும் வகையில், அத்தகைய நோயாளிகளுக்கு, நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரு பகல் நேர சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. .
இன்று நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள வெள்ளங்குளியில் அத்தகைய மையம் ஒன்றை திறந்து வைத்தபோது, தமிழகத்தில் ஆறு இடங்களில் தசை திறன் சிதைவு நோய் சிகிச்சை மையம் அமைய உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு. நெப்போலியன் கூறியுள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களில் இத்ததகைய மையம் தொடங்க மத்திய அரசு 500 கோடி ரூபாயும், தமிழக அரசு 225 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. நல்ல செய்திதானே!
Labels:
இன்றைய நெல்லை
இன்று ஒரு இனிய(!) தகவல் -நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் என்று ஏன் அதற்கு பெயர் வந்தது? அது உண்மையிலேயே நல்ல எண்ணெய்தானா? கேட்டுதான் பாருங்களேன்!
Labels:
ஒலி ஒளி காட்சிகள்
Tuesday 18 January, 2011
இன்றைய நெல்லை-2
விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம்.
இன்று நெல்லையில் நடந்த விழாவில், அமைச்சர் பெருமக்கள், ஆன்றோர்கள் முன்னிலையில், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. விடுதலை போராட்டமா, விலை என்னவென்று விளையாட்டு குழந்தைகள் வினவும் காலம் விரைவில் வரக்கூடும். அதனை தடுக்க இத்தகைய நினைவு சின்னங்கள் வழி வகுக்கும்.
நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, நகரில் நடந்தவற்றில், நடக்கபோகின்றவற்றில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து அளிக்கின்றேன்.
முடிந்தவரை, முன்னரே தகவல்கள் தர முயற்சிகள் செய்கின்றேன்.
Labels:
இன்றைய நெல்லை
மரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.
பறவைக்காய்ச்சல் நம் அனைவரையும் பாடாய்ப்படுத்திடும். பறவைக்காய்ச்சல் பரவுகிறதென்றால், கோழி வியாபாரம் குப்புறப்படுத்துவிடும். புரோட்டா கடைகளில் ஆட்டிறைச்சி என்று விற்கப்படும் மாட்டிறைச்சிக்கு மவுசு கூடிவிடும். கொழுப்புச் சத்து உடலில் கூட என்று, மாட்டுக்கறியை மறந்து விட்டு, கோழிக்கறி தின்பவர்கள் கூட, உயிருக்குப்பயந்து உண்ணா நோன்பிருப்பர்.
பறவைக்காய்ச்சலால்,பறவைகள் பாதிக்கப்படுகின்றதோ இல்லையோ, மனிதன் கோழிக்கறி தின்ன வழியின்றி திகைக்கின்றான். கடந்த இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு முதல், ஆசியா மற்றும் ஐரோப்பியா கண்டங்களில், ஆறு மாதத்திற்கொரு முறை தவறாமல் ஆஜராகின்றது.
பறவைகளுடன் மனிதனும் படும் பாட்டைப் பார்த்துக் கலங்கினர், கேம்ப்பிரிட்ஜ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இவர்கள் இணைந்து உருவாக்கியதுதான், பறவைக்காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் H5N1க்கு எதிர்ப்பு சக்தியுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழிகள். இவர்கள் மரபணு மாற்றம் செய்து உருவாக்கிய கோழிகள், H5N1 வைரஸிற்கு எதிர்ப்பு சக்தி கொண்டிருந்ததுடன், பிற பறவைகளிலிருந்தும் இவற்றிற்கு H5N1 வைரஸ் பரவாதென்பது கூடுதல் பலனாகும்.
என்ன கிளம்பிட்டீங்களா எடின்பார்க்கிற்கு?
Labels:
கட்டுரைகள்
Monday 17 January, 2011
இன்றைய நெல்லை.
இந்த பகுதியில் நெல்லையின் சிறப்புச் செய்திகளை என் பார்வையில் அன்றாடம் தரலாமென்று எண்ணித் துவக்கியுள்ளேன். இந்த முயற்சி வெற்றிபெற, உங்கள் ஊக்கம், ஆக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.
சரி, இன்றைய செய்திக்கு வருவோம்.
மாற்றுத்திறனாளிகளின் மகத்தான முயற்சி: மரம் நடுதல் மகத்தான சேவை. அந்த மகத்தான பணியை மாற்றுத்திறனாளிகள் மூலம், கின்னஸில் இடம் பெற, 19.01.2011ல், மாவட்டம் முழுவதும் 450 இடங்களில், ஒரு மணி நேரத்தில், முப்பத்தைந்தாயிரம் மரக்கன்றுகள் நடத்திட்டமிட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் அதன் செயலர் அட்வகேட் திரு.பிரபாகரன்,இரட்சண்ய சேனை, ஈஷா பவுண்டேசன், சுஸ்லான் பவுண்டேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு.மனோகர் ஆகியோரின் முயற்சி, இன்றைய நெல்லையின் இனிப்பான செய்தி.
Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Posts (Atom)