செய்தி-1:கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக புகார்களுடன்,நெல்லையில் உள்ள தனியார் பள்ளியொன்றை, இன்று பெற்றோர்கள் முற்றுகை இட்டனர். இந்த பள்ளிக்கு நெல்லையில் இரண்டு மூன்று இடங்களில் கிளைகள் உண்டு. அரசு, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்த்வுடன், இப்பள்ளிகள் தளரவில்லை. மாறாக, மாற்று வழிகள் கண்டுபிடித்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மட்டுமே ரசீது. ஆனால், பெற்றோர் கட்ட வேண்டியதோ, அப்பள்ளிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தைதான். அது அவர்களின் தலையெழுத்து. மரத்தடியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்தவர்கள் எல்லாம், இன்று தன்னாட்சி பல்கலைகழகங்கள் பகட்டாய் ஆரம்பித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்துவோம் என்று கூறும் பெற்றோரின் பிள்ளைகள் தீண்ட தகாதவர்கள் ஆகின்றனர். ஆம், அவர்கள் கடைசி பெஞ்சில்தான் உட்காரவேண்டும், அவர்களின் வீட்டு பாடங்கள் திருத்தபடாது. இதுகூட, துணிந்த பெற்றோர் ஒருவர் தெரிவித்ததுதான்.
இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் இதற்கென்று வரவேண்டும் போல!
செய்தி-2 : நாசரேத்தில், போலி நர்சிங் கல்லூரி நடத்தியவருக்கு, சாத்தான்குளம் நீதிமன்றம், இன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்று சொல்லி, ஏராளமான மாணவியரை அக்கல்லூரியில் சேர்த்துள்ளார். இறுதியாண்டு முடித்தவர்களுக்கு, போலி சான்றிதழ் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில், ஜெனட் என்ற மாணவி அளித்த புகார், அந்த போலியின் முகத்திரை கிழிதெறிந்துள்ளது.
சபாஷ் ஜெனட்!
சிறப்பு செய்தி: இன்று காலை, நெல்லையை சார்ந்த இரு பிரபல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் "பலா பட்டறை சங்கர்" இவர் நெல்லையில் பிறந்து, கேரளத்தில் வளர்ந்து, மீண்டும் தமிழக தலைநகரில் தனி முத்திரை பதித்து வருபவர். மற்றொருவர், "எறும்பு". இவரும் உயர்-திருநெல்வேலியில் பிறந்து, சென்னையில் பல தொ(ல்)லைபேசிகளில் தொடர்பை துறப்பவர். இருந்ததென்னவோ இருபது நிமிடங்கள்தான். பல பதிவர்களை பற்றி, கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். இன்னும் இரு தினங்கள், இந்த இருவரோடு நானிருப்பேன். எங்கள் பகிர்வுகள், உங்கள் பார்வைக்கு விரைவில்.